புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

கபடி..! கபடி..! கபடி..!


(தலைப்பை கில்லி-ல கபடி ஆடும்போது கண்ணை உருட்டி, கட்டை விரலை ஆட்டி விஜய் சொல்வாரே அந்த மாதிரி படிங்க!)
(பக்க வாத்தியம் : நான் விஜய் விசிறி அல்ல!)

கபடி..!! அப்படியே மெல்ல மூச்சை இழுத்துக்கிட்டு கண்ணை மூடிசொல்லுங்களேன்!
இந்த வார்த்தை மந்திரம் மாதிரிங்க அப்ப எங்களுக்கு!
பெரிய பெரிய கபடி மேட்ச்செல்லாம் இரவு நேரத்தில் தான் ஊர்கள்ள தொடங்கும்!
கிலோ வாரியாக நடக்குற மேட்சுல 35 கிலோவுல தொடங்கி 45, 50, 60, அதுக்கு மேல ஓப்பன் டோர்(யார் வேண்டுமானாலும் விளையாடலாம்!) இந்த ஓப்பன் டோர்-வகையில் விளையாடுபர்கள் எல்லாம் உள்ளூர் அர்னால்டு ரேஞ்சுக்கு இருப்பார்கள்! இந்த கடோத்கஜன் டீமை சில நேரம் சின்னப் பையன்கள் நிறைந்த நாகேஷ் டீமிடம் கோத்துவிட்டு விடுவார்கள். அப்போது ஆடியன்ஸோட ஃபுல் சப்போர்ட்டும் அந்த சின்ன டீமுக்குத்தான்! அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு பாய்ண்டும் அப்ளாஸ்களை அள்ளும்!

எனக்கு என்னோட நண்பனுக்கும் ரோல்மாடலாக அப்போதைய சில கபடி வீரர்கள் இருந்தார்கள்!அவர்களுடைய அர்னால்டு சைஸ் தொடைகளைப் பார்த்துவிட்டு ஏக்கப் பெருமூச்சு விடுவோம்! உருக்கு மாதிரி உடம்பை வைத்திருப்பார்கள்! அந்த ஏக்கத்தில் நானும், நண்பனும் சுண்டக்கடலையை ஊற வைத்து தண்டால் எடுத்தகதைகளும் உண்டு.சும்மா ரெண்டு நாளைக்கு!ஆனால்,நீங்கள் தொடர்ந்து கபடி விளையாண்டால், உங்கள் உடல் கட்டாவதை(ரெண்டா இல்லீங்க!.. பழனிப் படிக்கட்டு!) நீங்களே நினைத்தாலும் தடுக்க முடியாது!

முதல்நாள் இரவு 9 மணிவாக்கில் தொடங்கி மறுநாள் சாயங்காலம் வரை கபடி நடக்கும்! நானும் , எனது நண்பனும் தலையில் ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்து விடுவோம்! ஹே..ஹே என்று கூட்டம் கூவக்கூவ நம்ம பசங்க சும்மா பின்னுவாங்க!
கிரேக்க அச்சிலஸ்,மகாபாரத கர்ணன் மாதிரி வீழ்த்தவே முடியாத வீரர்களெல்லாம் இருப்பாங்க! எப்புடிப் புடிச்சாலும் போயிடுறாண்டா..இவனை என்ன தாண்டா பண்ணுறது-ந்னு திகைக்க வச்சுருவாங்க சிலபேர்!தோள்பட்டைக்கு மேலே பறப்பாங்க!
சும்மா வில்லு மாதிரி வளைவாங்க..இன்னும் சில பேரு பீமன் மாதிரி மொத்த டீமையும் இழுத்துக் கொண்டு வருவார்கள்! நல்ல பார்வைத்திறனும், லாஜிக் புத்தியும் கபடிக்கு ரொம்ப அவசியம்!

*நடுவரின் தீர்ப்பே இறுதியானது!
*ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்!
*முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை!

இப்படி கபடி நோட்டீஸிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட மாட்டாது! 'இதுதான் உங்களுக்கு இறுதி அழைப்பு ' என்று இருபத்தாறு தடவை டீமை அழைத்துக் கொண்டிருப்பார்கள்!

ரெண்டு டீம் ஆடுதுன்னா ரெண்டு ஊருக்காரங்களும் மல்யுத்தம் போடுற மாதிரிதான்! ஏதாவது பிரச்சினைன்னா உடனே ரெண்டு ஊருப்பயபுள்ளைகளும் களத்தில் இறங்கி நடுவரிடம் சண்டைபோட்டுக் கொண்டிருப்பார்கள்! மைக்கில்- வெளியாட்கள் உள்ளே வர வேண்டாம்! நடுவரின் தீர்ப்பே இறுதியானது - என்பது காற்றினிலே வரும் கீதம் போலக் கரைந்து கொண்டிருக்கும்!

15-5-15 என்பதுதான் மேட்ச் டைமிங்!


இதில் 5 என்பது டைம்-அவுட் மற்றும் சைடு சேஞ்சுக்கானது.
ஆனா, பிரச்சினை வந்துச்சுன்னா சில மேட்ச் விடிஞ்சாலும் முடியாது!
முருகேசன் நினைவுக்குழு,
வெண்ணிலா கபடிக்குழு,
தேவரின் செல்வங்கள்,
பயமறியா தம்பிகள்..
இதெல்லாம் சில சுற்று வட்டாரக் கபடி டீம் பெயர்கள்!

கபடியில மைக் அறிவிப்புகள், சுவரொட்டிகள் எல்லாமே தூய தமிழில் என்பது ஒரு மகிழ்ச்சியான விசயம்!ரெடிமேடாக முந்தின நாளே வந்து முளைத்திருக்கும் கடைகள் நல்ல லாபம் பார்த்து விடுவார்கள்.மைக் செட்,லைட்ஸ், கொட்டகை, ஏன் பரிசையும் கூட அந்தந்த ஊரிலுள்ளவர்கள் அன்பளிப்பு அளித்து விடுவார்கள். அதுக்குப் பரிகாரமாக அவர்கள் பெயர் நோட்டீஸில் இருக்கும்!

எனக்கு சிறிய வயதில் கிரிக்கெட்டை விட கபடியில் தான் ஆர்வம் அதிகம். பள்ளிக்கூடத்துல பசங்க நோட்டீஸ் அடிக்க வசதியில்லைன்னா கையிலேயே முதல் காப்பி எழுதி அதை பிரதி எடுத்து பள்ளியெங்கும் ஒட்டி விடுவார்கள். சில சமயம் கையெழுத்துப் பிரதியிலேயே நோட்டீஸ் உருவாக்கிய சம்பவங்களும் உண்டு!நம்ம கையெழுத்து அழகாயிருக்கும்னு நம்மகிட்ட வந்து (நம்புங்க பாஸ்!) எழுதிவாங்கிட்டுப் போவாங்க. எழுதுறது மட்டும்தான் இவன் வேலை விளையாண்டதெல்லாம் இல்லைனு நினைச்சுறாதீங்க.
ஒரே ஒரு மேட்சுல சரியா 35-கிலோ இருந்தப்ப கபடி, கபடி-ந்னு நானும் இறங்கினேன். அந்த மேட்ச் பாதியிலேயே அடிதடி- யில நின்னுபோச்சு.
எல்லாரும் அடிச்சுக்கிட்டு நின்னப்ப நான் டென்ஷனாகி ஓரமாய் இருந்த டீக்கடையில போயி டீக் குடிச்சேன்.(வீரம்ப்பு..)

அதோ..ட சரி! மத்தபடி ஊருக்குள்ள விளையாடுவனே தவிர ஊரு விட்டு ஊரு போயி அடிவாங்குற வேலையே இல்ல! போனா நல்ல பிள்ளையா மேட்சு பாக்குறதோட சரி! வாய்ப்புக் கிடைச்சா,ஒரு தடவை கிராமத்துல போய்க் கபடி மேட்ச் பாருங்களேன்!
அது ஒரு தனீ... உலகம் பாஸ்!







15 கருத்துகள்:

elamthenral 12 ஜூன், 2010 அன்று PM 9:23  

கபடி, பல்லாங்குழி, பாண்டி இதுபோன்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு எல்லாம் அழிந்துகொண்டே வருகிறது... வருத்ததிற்குறிய விஷயம்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) 12 ஜூன், 2010 அன்று PM 10:40  

//அதோ..ட சரி! மத்தபடி ஊருக்குள்ள விளையாடுவனே தவிர ஊரு விட்டு ஊரு போயி அடிவாங்குற வேலையே இல்ல!//

ஹிஹி.. இது மதி.. :)
நல்லா இருக்குங்க..

தேவகோட்டை ஹக்கீம் 12 ஜூன், 2010 அன்று PM 10:51  

கலக்கலான பதிவு.முக்கியமான கன்டிசனை விட்டுபுட்டீங்க!"மது அருந்தி விளையாட கூடாது. நம்ம டீம்'தீன் இலாஹி கபாடி குழு'.

தேவகோட்டை ஹக்கீம் 12 ஜூன், 2010 அன்று PM 10:55  

நம்ம ஏரியாவில் உள்ள மத்த டீம் பெயர்கள் : மாட புரா அணி,ஜக்குபாய் 7ஸ்,தீன் 7ஸ்,ஜாலி டென்ஸ்,சிங்க தமிழன் அணி,etc...

ஹேமா 13 ஜூன், 2010 அன்று AM 12:52  

உலக கால்பந்து தொடங்கிய நேரத்தில் கபடி பற்றிய பதிவு.அறியத்தந்தீர்கள் அண்ணாமலை.நன்றி.

அண்ணாமலை..!! 13 ஜூன், 2010 அன்று AM 11:05  

@ புஷ்பா

உண்மையிலேயே வருத்தத்துக்குரியது தாங்க!
கால மாற்றம்!!!!!!!


@ Ananthi

எல்லாம் ஒரு முன்னெச்சரிக்க தானுங்கோ!!
:)

அண்ணாமலை..!! 13 ஜூன், 2010 அன்று AM 11:08  

@ தேவகோட்டை ஹக்கீம்

ம்ம்..அந்த விதிமுறையை எப்படி மறந்தேன்??
நண்பரே! நீங்க இன்னும் நிறையப் பேரை
எடுத்து விட்டதுக்கு ரொம்ப
நன்றிங்கோவ்!

அண்ணாமலை..!! 13 ஜூன், 2010 அன்று AM 11:09  

தெரிந்தது மற்றி எழுதுவது மதி..!
என்றுதான் கபடி-யை எழுதிட்டன்!!!!
:) ..ரொம்ப நன்றிங்க!

தாராபுரத்தான் 14 ஜூன், 2010 அன்று AM 6:13  

சடு குடு..

Chitra 14 ஜூன், 2010 அன்று AM 11:01  

(தலைப்பை கில்லி-ல கபடி ஆடும்போது கண்ணை உருட்டி, கட்டை விரலை ஆட்டி விஜய் சொல்வாரே அந்த மாதிரி படிங்க!)
(பக்க வாத்தியம் : நான் விஜய் விசிறி அல்ல!)


...... ha,ha,ha,ha....

அண்ணாமலை..!! 14 ஜூன், 2010 அன்று PM 7:13  

@ தாராபுரத்தான்

சடுகுடு..சடுகுடு.!!
வாங்க அய்யா!!

@ Chitra

உங்களுக்கு ஏங்க விஜய் மேல
இம்புட்டுக் காட்டம்!
:)

அன்புடன் நான் 15 ஜூன், 2010 அன்று AM 8:58  

காலம் கபடி என்னும் நம் மரபு விளையாட்டை தின்றுகொண்டுள்ளது....
உங்க பகிர்வுக்கு நன்றிங்க.

அண்ணாமலை..!! 15 ஜூன், 2010 அன்று AM 10:50  

நண்பரே! நம்ம ஊருப்பக்கமெல்லாம் இன்னும்
பசங்க ரவுண்டு கட்டி விளையாண்டுகிட்டுதான்
இருக்காங்க!

ஆனாலும், இந்த ஆர்வம் குறைந்திருக்கிறது
என்னவோ உண்மைதான்!

Unknown 18 ஜூன், 2010 அன்று PM 5:23  

கபடி சினிமாவில மட்டும்தான் பார்த்திருக்கேன், உங்கள் கட்டுரைவாசித்தமை கபடி பார்த்தமாதிரி இருந்தது, பாராட்டுக்கள்.

அண்ணாமலை..!! 19 ஜூன், 2010 அன்று AM 10:38  

மிக்க நன்றிகள் நண்பரே!
கிராமத்துலயும் வாய்ப்புக் கிடைச்சா போய்ப் பாருங்க!
இன்னும் அருமையா இருக்கும்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!