*
பகுதி 1 இங்கே -> வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!
பகுதி 2 இங்கே -> விழித்துக்கொண்ட பேரரசு - திருப்புறம்பியம் போர்!
பகுதி 3 இங்கே -> அரங்கேறியது ஒரு இராஜகொலை -ஆதித்த கரிகாலன் மரணம்!
பகுதி 4 இங்கே ->அரியணை ஏறினான் இராஜராஜசோழன்!
குந்தவை எனும் தேவதை!
இராஜராஜசோழன் ஒன்றும் திடீரெனப் புகுந்து ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தை விஸ்தீரணம் செய்துவிடவில்லை என்பதை நாம் முந்தைய பக்கங்களில் அறிவோம்.
சந்திரகுப்தருக்கு ஒரு சாணக்கியர் இருந்ததுபோல ராஜராஜனுக்கு சாணக்கியராக இருந்தவர் ஒரு பெண் என்றால் நம்பமுடிகிறதா..?
ஆம்.அவர்தான் குந்தவை நாச்சியார்.
இராஜராஜனின் அக்காவான இவர்தான் அவனுடைய ஒவ்வொரு வெற்றிக்கும் பின் இருந்த பெண்.
தஞ்சையில் கற்றளி(கற்கோவில்!) எழுப்பியதில் இருந்து, தரணியில் எங்கும் வெற்றிக்கொடி நாட்டியதுவரை ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக ராஜராஜனுக்குப் பக்கத்துணையாயிருந்தது குந்தவையே. அவன் கொஞ்சம் கொஞ்சமாக தனது அக்காவான குந்தவையால் செதுக்கப்பட்டான் என்றே சொல்லலாம்.
'குந்த' என்றால் 'தும்பைப்பூ போல் தூய்மையான' என்ற அர்த்தம்.குந்தவை எனும் தேவதையால் சோழர்குலம் பெருமையடைய வேண்டும் என்பதாலேயே சுந்தரசோழர் இந்தப்பெயரை வைத்திருந்தார்.(கி.பி-960 களில், கீழைச்சாளுக்கிய நாட்டை ஆண்ட வீமன் என்பவன் தன் மகள் குந்தவையை அரிஞ்சய சோழருக்கு மணமுடித்தான்.அந்த வீமன் குந்தவையின் நினைவாகவே சுந்தரசோழர் தன் மகளுக்குக் குந்தவை என்று பெயரிட்டார்.பின்னாளில் தன் அக்காவின் மீது கொண்ட எல்லையற்ற அன்பால் தன் மகளுக்கும் குந்தவை என்றே ராஜராஜன் பெயரிட்டான் என்பதும் வேறு விசயம்!)
குந்தவையின் நட்சத்திரமான அவிட்டமும்,ராஜராஜனின் நட்சத்திரமான சதயமும் அடுத்தடுத்த நட்சத்திரம் என்பதாலும் அவர்களுக்குள் பாசப்பிணைப்பு நிறைந்திருந்தது என்று ஆரூடம் கூறுபவர்களும் உள்ளனர்.ஆண்டுதோறும் இந்த இரண்டு நாட்களுமே அப்போது சோழமக்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டது.
"உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் திரு தமக்
கையார் வல்லவரையார் வந்தியத்தேவர்
மகாதேவியார் ஆழ்வார். பராந்தகன்
குந்தவையாழ்வார்"
என்று தஞ்சைக் கல்வெட்டுகளும்,
"உடையார் பொன் மாளிகையில் துஞ்சிய தேவர்
திருமகளார் ஸ்ரீ பராந்தகன் குந்தவைப் பிராட்டியார்"
என்று தாராபுரம் கல்வெட்டுகளும் கூறுகின்றன.
இராஜராஜசோழன் கி.பி 947-ல் ஐப்பசி சதயத்தில் பிறந்தவன்.இதனாலேயே சதயத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே.ஆனாலும் மிகப்பொறுமை காத்து(அரியணை ராஜராஜன் அமர்வதற்காகக் காத்திருந்தது என்பதே தகும்!) கிட்டத்தட்ட தனது 38-ஆவது வயதிலேயே அரசுக்கட்டில் அமர்ந்தான்.
இலங்கையின் வடபகுதிகள்,பாண்டியர்கள்,சாளுக்கியர்கள் எனப் பலரை போர்முனைகளில் ஏற்கனவே சந்தித்து பேரளவில் பெற்றிருந்த அனுபவத்துடன் ராஜராஜன் அரியணை ஏறியபோது சுற்றியிருந்த அரசர்களின் வயிற்றில் புளியைக் கரைத்ததென்னவோ உண்மை.
என்றாலும்,கி.பி 985 -லேயே ஆட்சிக்கு வந்தாலும்,
முதல் நான்கு வருடங்கள் ஆட்சியையும், நாட்டையும் படைகளையும் பலப்படுத்துவதில் தான் ராஜராஜனது கவனம் இருந்தது.எதிரிகளைக் கண்காணித்துப் பின் அவர்களை ராஜராஜன் அணுகிய விதம் போற்றுதலுக்குரியது.
சுந்தரசோழன் இறப்பின்போதே வானவன் மாதேவியாரும் உடன் கட்டை ஏறிவிட்டதால் பெற்றோரின் இடத்தில் இருந்து ராஜராஜனை வழிநடத்தியது குந்தவையே.ராஜராஜனும் அக்காவான குந்தவையின் மீது உயர்ந்த மரியாதை வைத்திருந்தான்.அரசின் முக்கிய விசயங்களில் முடிவெடுக்கும் அளவிற்கு குந்தவையின் செல்வாக்கு இருந்தது.அந்த முடிவுகள் ராஜாங்க விசயங்களில் சரியாகவும் இருந்தது என்பதும் உண்மை.
குந்தவையும் பிறந்தவீட்டுடனே தங்கிவிடவேண்டும் என்ற பேராவல் கொண்டவராகவே இருந்தார்.அதனாலேயே பேரரசுகளுக்கு ராணியாக வேண்டியவர் சற்றே வலிமையிழந்து சிற்றரசாகக் கோலோச்சி சோழருக்குக் கீழ் இருந்த வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவனை மணந்தார்.
(பொன்னியின் செல்வனில் உயர்திரு.கல்கி அவர்களின் இலங்கைக்கு அருண்மொழியை சந்திக்கச் செல்லும் தூதனான அதே வந்தியத்தேவன்.அருண்மொழி கதைநாயகனாக இருந்தபோதும் அவனுக்கும் ஒருபடிமேலே போய் தனது வீரச்செயல்களினால் நம்மைக் கவர்ந்தவன் இந்த வாணர்குல வீரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!)
வந்தியத்தேவன் ராஜராஜன் ஆட்சியில் வட ஆற்காடு(சேலம்) பகுதிகளின் தண்டநாயகனாக இருந்தான்.
வந்தியத்தேவனை மணந்த குந்தவை சோழ அரண்மனை பழையாறையிலேயே தங்கியிருந்து கோவில்களுக்குக் கொடைகளும்,ராஜராஜனுக்கு விலைமதிப்பற்ற அறிவுரைகளையும் வழங்கினார்.
ராஜராஜனின் வெற்றிக்குப் பின் இருந்த பெண் என்று தைரியமாக நாம் குந்தவை நாச்சியாரை அடையாளம் காட்ட முடியும்.
குந்தவி தேவியும், வானதியும்
குந்தவை சைவசமயப் பற்றுடன் இருந்தாலும் வைணவ, ஜைன மதங்களையும் போற்றிவளர்த்தார்.இதில் அக்காவின் வழியையே ராஜராஜனும் கடைப்பிடித்தான்.
குந்தவை நாச்சியாரின்,
ரவிகுல மாணிக்க ஈஸ்வரம்,குந்தவை ஜீனாலயம்,குந்தவை விண்ணகரம் போன்றவை இதற்கு சாட்சி.
(ஜீனாலயம் - சமணமதப்பள்ளி, விண்ணகரம் - பெருமாளுக்கான கோயில்களையும் குறிக்கும்!)
தஞ்சைப் பெரியகோவிலில் சுந்தரசோழருக்கும்,வானவன்மாதேவியாருக்கும் திருமேனி(சிலை) எடுத்து நிவேதனமும் அளித்தார்.உமாதேவியர்,விடங்கர் திருமேனியை அளித்ததோடு ஏராளமான பொன்னையும்,முத்து,மாணிக்கங்களையும் கோவிலுக்கு அளித்துள்ளார்.
(இதன் மதிப்பு இன்றைய கணக்கில் சில கோடிகள்!)
ஆதித்த சோழன் இறந்தபிறகு அரியணை பற்றி அருண்மொழிக்கு அறிவுரை கூறியதிலும் குந்தவையின் பங்கு மகத்தானது.
குந்தவை நாச்சியார் தவிர,
இன்னொரு பெண்பிராட்டியாரான செம்பியன் மாதேவியார்(கண்டராதித்தரின் மனைவி!) 6 தலைமுறை மன்னர்களைக் கண்டவராக சிறப்புடன் வாழ்ந்துவந்தார்.ராஜாங்க விசயங்களில் அவர் தலையிடவில்லை என்றாலும் அரண்மனையின் முக்கிய விவகாரங்களில் அவர் முன்னின்று தன் மக்களை வழிநடத்தினார் என்று தெரிகிறது.
சோழநாட்டில் பெண் அதிகாரிகள் செயல்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் கூட இருக்கின்றது. இராஜராஜனின் மனைவி லோகமகாதேவி கொடுத்த நிவந்தங்களைக் கல்வெட்டில் பதிக்குமாறு "சோமன் அமிர்தவல்லி" என்ற பெண் அதிகாரி உத்தரவிட்டதாகக் கூறும் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து பெண்களும் அந்த நேரத்தில் உயர்ந்த இடத்திலிருந்ததை அறிய முடிகிறது.
“
உடன் கூட்டத்து அதிகாரம் செய்கின்ற
கோவலூர் உடையான் காடன்
னூற்றெண்மரையும் அதிகாரிச்சி
எருதந் குஞ்சர மல்லியையும்..!
“
என்ற கல்வெட்டில் இதனை நாம் அறிய முடிகிறது.
வரலாறு எப்போதும் போர்களை மட்டும் கணக்கிடுவதல்ல என்பதால் தான் இதனையும் எழுதினேன்.ரொம்ப அயர்ச்சி தந்தால் பாதையை மாற்றி விடலாம்.
இவ்வளவு பாசமாயிருந்த தமக்கை குந்தவைப் பிராட்டியாரைப் பற்றி எழுதாவிட்டால் ராஜராஜன் என்மீதும் (பாசப்)போர்தொடுக்கக்கூடும். அதனாலேயே இந்தப் பதிவு.
(பொன்னியின் செல்வனில் நந்தினி,பூங்குழலி என்று அழகுப்பதுமைகள் பலரைப் பற்றியும் உயர்திரு.கல்கி அவர்கள் வர்ணித்திருந்தாலும் நம் ஆதர்சத் தேர்வு நீள்மூக்கும்,கொண்டையும்,கயல்விழிகளும் கொண்டு பேரறிவுடன்(பேரழகுடனும்) விளங்கிய குந்தவை நாச்சியார்தான்.
வந்தியத்தேவனின் காதுகளில் இது விழுந்திருக்காது என்றே நம்புவோம்!)
-தொடர்ந்து வருவான்
மன்னாதிமன்னன்- இராஜராஜசோழன்! (பகுதி-5)
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
லேபிள்கள்: இராஜராஜ சோழன்
22 கருத்துகள்:
அருமையான தொகுப்பு நண்பா!
இவ்வளவு விசயங்கள எங்க இருந்து எடுத்தீங்க?
உங்களோட முயற்சிக்கு என் வணக்கங்கள்!
பொன்னியின் செல்வன் ஏதோ ஒரு மன்னனின் கற்பனை கதைன்னு நினைச்சு இன்னும் படிக்காம இருக்கேன்..
உங்களோட பதிவுக்கு அப்புறம் அத உடனே படிக்கணும்னு தோணுது!
நன்றி நண்பா!
அப்பப்பா இவ்வளவு தகவல்களா?
பிரமாதம்போங்க.
ராஜராஜன் பதிவுகள் களைகட்டி விட்டது. தொடருங்கள்..
வணக்கம்
நான் உங்கள் உலகுக்கு புதியவன் உங்கள் சுயவிவரத்தை படிக்கும் போதே தங்களின் தமிழ் பற்றுக்கு தாழ்பனிந்தேன்.....
http://marumlogm.blogspot.com
அழகான ஓவியங்களுடன் வாசிக்க வாசிக்க ஆர்வமான தகவல்கள்.ஒரு சரித்திர நாவல் வாசிக்கும் பிரமிப்பு.
தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள். சுவாரசியமாகவும், புரியும்படியும் எழுதியுள்ளீர்கள்
குந்தவை நாச்சியார் இல்லாத ராஜராஜ சோழனை நினைத்து கூட பார்க்கமுடியாது............
உங்கள் தொடர் பதிவைப் படிப்பதற்கு நாள்தோறும் நேரம் ஒதுக்கி வைத்துவிட்டேன் தோழரே..இந்த சரித்திர படைப்பால் வலைப்பூக்களின் வரலாற்றில் தங்கள் தளம் சிறப்பானதொரு வரலாறு படைத்து விட்டது.
வந்தியத்தேவனின் காதுகளில் இது விழுந்திருக்காது என்றே நம்புவோம்!)..hahaha
thiru kalki avarkali pola ellamal..alagai erukirathu...
மீண்டும் திரு.சாண்டியனின் கதைகளை படிக்க ஆவல் ஏற்படுகிறது.
நன்றி.
Dear Annamalai,
You are doing great work. Every Tamils should know our History and great acheivement.
Your valuable effort will be helpfull.
We are talking about Alexander and Nepolien but We must talk about our Great King Raja Rajan.
And one morething, Please try to read Kalki's Ponniyin Selven whoever not reading it sofar,
And Please tell me How to write in tamil.
Nandri Nallavan
www.periyakottai.blogspot.com
மிகசிறப்பாக எழுதுகிறீர்கள்... இது தொடர்பாக சிலதகவல்கள் தரவேண்டும் என்று விரும்புகிறேன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்துங்கள்.. நன்றி
எனக்கு மட்டுமல்ல உங்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள விரும்பும் பல நண்பர்களுக்கு பயன்படும் ஆகவே , உங்கள் புரோபைலில் மின்னஞ்சல் முகவரியை இணைத்து விடுங்களேன்..
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
______/\______
@ Dharshi,
இணையகடித முகவரியை இணைத்துவிட்டேன்!
தங்களது அறிவுறுத்தலுக்கு மிக நன்றி!
@ Thamizha,
நண்பரே..தமிழில் எழுதுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றன.
www.azhagi.com
http://www.kamban.com.au/
http://thamizha.com/ekalappai-anjal
போன்ற இடங்களில் தமிழ் மென்பொருட்களும்..
(மேலதிக விவரங்கள் அங்கே தங்களுக்கு தெளிவாக உள்ளன!)
http://english-to-tamil-keyboard.appspot.com/
இது
இணையத்திலேயே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக மாற்ற செய்திடவும் உதவும்..!
(ammaa - அம்மா)
தமிழில் எழுதப்போகும் உங்களுக்கு மிக நன்றிகள்!
தகவல்கள் திரட்டுவதால் கொஞ்சம் தாமதமேற்படுகிறது.
இன்னும் மிளிர்வுடன் வருவான்
மும்முடிச்சோழன்!(இராஜராஜசோழன்!)
காலதாமதத்திற்கு பொறுத்தருள்க!
___/\___
குந்தவைதான் கொலையாளியா? ஆதாரங்களுடன் ஒரு அலசல்
படித்துவிட்டீர்களா தல,
enga sir, neenga romba naal a new post podave illa??? ethir paarpodu. ungalin thozhi
என் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...
அருமையான தொகுப்பு நன்றி
இவன்
http://tamilcinemablog.com/
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
அனைவருக்கும் நன்றிகள்!
__/\__
கி.பி-960 களில், கீழைச்சாளுக்கிய நாட்டை ஆண்ட வீமன் என்பவன் தன் மகள் குந்தவையை அரிஞ்சய சோழருக்கு மணமுடித்தான்.அந்த வீமன் குந்தவையின் நினைவாகவே சுந்தரசோழர் தன் மகளுக்குக் குந்தவை என்று பெயரிட்டார். ஆனால் குந்தவையின் தம்பியான இராஜராஜசோழனே கி.பி 947-ல் ஐப்பசி சதயத்தில் பிறந்தவன் என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவில் எங்கோ தவறு தெரிகிறது.
கருத்துரையிடுக