நிலவும் இவனும் நித்தம் மகிழ்ந்தே
...உலவித் திரிவர் உயர்வாய் வானில்!
நீல வண்ண நிலம்போல் வானம்
...கோல வடிவாய்க் கரையும் மேகம்!
தேவதை போலே திரியும் நிலவு
...மாவதை இவனும் மறைத்ததை அறியா!
பெருமை மிகவும் பூண்டே, வானப்
...பருந்தைக் கடந்தும் பறக்கும் நிலவுக்
கெத்தனை பெரிய இறகு என்றே
...இத்தனை நாளாய் எண்ணியும் வந்தான்!
எழுந்து சென்று ஏதோ ஏதோ
...கொழுந்து எரியக் கலந்து பேசி,
நிலவு சிரித்தால் நிதமும் சிரிப்பான்
...நிலவழு தால்இந் நீசனும் அழுவான்!
பழுதைப் போலே பாலனை எண்ணி
...கழுத்தைக் கூடவும் காட்டிட இயலா
வெண்ணி லாவிடம் வேண்டிப் பேசிட
...கண்ணையும் அதுவோ காட்டிட மாட்டா!
திரும்ப நினைவைத் தீண்டிய போதே
...விருப்ப மின்றி வெண்ணிலா சொன்னது!
உனையும் பார்ப்பேன் உலகில் நானும்
...இனியும் பேசு என்றும் கேட்பேன்!
இரும்பால் செய்த இதயம் அதற்கு
...துரும்பாய் இளைத்தும் துணைவர வில்லை!
இவனுக் கோபனி இதழென இதயம்!
...குவலயப் பனிபோல் 'களுக்'கெனக் கரையும்!
இறகு மட்டுமே இருப்பதை அறிந்தவன்
...உறவு வேண்டியே ஒருயுகம் துடித்தவன்!
அலகும் உண்டு அப்பற வைக்கென
...சிலபொழு தேனும் சிந்தித் திருந்தால்!
*கற்றவர் மறுக்கும் கலகம் இதனில்
...ஒற்றனைப் போலே ஒளிந்திட மாட்டான்!
தொடுப்பு:
*புதுக்கவிதை எனப் பெயரை வைத்துவிட்டு இதுபோல் எழுதுவதற்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?:)
*"கற்றவர்" - என்றால் "அனுபவப்பட்டவர்கள்" என்று கொள்ளலாம்.
ஓர் நிலவும் - சிறுவனும்!
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
புதன், 23 பிப்ரவரி, 2011
லேபிள்கள்: நெடுங்கவிதைகள்
3 கருத்துகள்:
நிலவும் இவனும் நித்தம் மகிழ்ந்தே
...உலவித் திரிவர் உயர்வாய் வானில்!
நீல வண்ண நிலம்போல் வானம்
...கோல வடிவாய்க் கரையும் மேகம்!
.....ஆரம்ப வரிகளே, அழகுடன் பவனி வருகின்றன... :-)
நல்லதொரு வரிக் கோர்ப்பு அருமையாக இருக்கிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
@ Chitra,
@ ம.தி.சுதா,
மிக்க நன்றிகள் !!
கருத்துரையிடுக