நகரும் படியிலும்,
நடந்தே விரைகிறான்
நாகரிக மனிதன்! (escalator!)
காலனைத் துரத்திப்
பிடித்திட இத்தனை
வேகமென் றெண்ணிடுவேன்!
நாக ரீகம்
எனவே உரைத்து
நலங்கள் பலதொலைப்பான்!
கால மாற்றம்
எனும் பெயராலே
களங்கம் பலபுரிவான்!
இவன்..
இன்றை நினைத்து
நேற்றினைத் தொலைத்தான்
வாழவும் மறந்துவிட்டான்!
இதோ..
நாளையை நினைத்து
இன்றைத் தொலைக்கிறான்
நன்மைபல என்பான்!
நாளை எனவரும்
நாளைக் காணாது
நாளை இறந்திடுவான்!
பல்லைக் காட்டி
பணமும் சிரிக்க!
பாதாளம் சென்றிடுவான்
நில்லென ஒருநொடி
மனதை நிறுத்த
மறந்தவனும் ஆனான்!
இல்லை யெனஎவர்
வந்திடும் போதும்
இல்லை எனவுரைத்தான்!
இவன் ...
நினைப்பால் எதையும்
வாழ்வான்! ஆனால்..
நிஜத்தில் வாழ்ந்துவிடான்!
கற்பனை தனிலே
காலம் கரைத்தான்
காலன் தனைஅடைந்தான்!
தத்துவம் பலவும்
பேசுவன் எதையும்
தாரை வார்த்துவிடான்!
இத்தரை மீதில்
இதுஎன்ன வாழ்வென
இழித்தும் பேசிடுவான்!
முத்தங்கள் கன்னியர்
முகத்தில் தந்ததும்
முழுதும் மறந்திடுவான்!
அழுகை கவலை
கோபம் என்றே
அருமை தொலைத்திடுவான்!
இவன்தான் என்றும்
இனிமை அறியாது
இறப்பான் அற்ப மானுடனே!!!!!
***************