புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

அனுபவங்களும்..இன்ன பிறவும்! (ஆனி-16)

னக்கு ரொம்ப நாளாக ஒரு குழப்பம் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது..
சொன்னா திட்டக் கூடாது!
அது..அது வந்து..
நம்ம தேசியக்கொடியில இருக்குற நிறங்கள் பத்தி..

எந்த கலர் மேல வரும்..எந்த நிறம் கீழ வரும்னு
(ஒண்ணு தமிழ்-ல சொல்லு-இல்லாட்டி இங்கிலிபிஷ்ல சொல்லு!-கலராம்-நிறமாம்!)

சிவப்பு மேலயா..பச்சை மேலயா அல்லது
சிவப்பு கீ........!
இந்தக் கொடுமைக்கு என் தங்கை தான் முற்றுப்புள்ளி வைச்சது...

" இங்க பாரு குழப்பிட்டே இருக்காத..!
முதல்ல சாப்பிடுரதுக்கு முன்னாடி என்ன பண்ணுவாங்க..?"
"கைகழுவுவாங்க" என்று சொல்லி தங்கையின் பல்லில் 'நறநற' பட்டேன்.

இலை போடுவாங்க. பிறகு(பச்சை - So, கீழே)
சாதம்.. போட்டு பிறகு..(வெள்ளை)
சாம்பார்..(காவி - So, மேலே)

ஊத்துவமா..அத ஞாபகம் வச்சுக்கன்னு சொன்னது பாருங்க..
இனிமே மறக்க முடியுமா..! ரொம்ப டேங்க்ஸ் தங்கச்சி!

ஆனா, நீ வைக்கிற சாம்பாரே ரசம் மாதிரி தான இருக்கும்?..-ந்னு கேட்டு கேள்வியை முடிக்கும் முன்பே தேவையில்லாமல் கொட்டுப்பட்டேன்!

இதே மாதிரி ஒரு இடத்துல எவரெஸ்டோட உயரம் கூட படிச்சேன்..

எட்டு எட்டா வச்சுப் போனா நாலே எட்டுல எவெரெஸ்ட் போயிரலாம்னு..
(அதாங்க - 8848 மீட்டர்)

இனிமே வாழ்க்கைக்கும் மறக்காது பாருங்க!

********************************

ரு அரசர் வேட்டையாடக் காட்டுக்கு சென்றவர் தளபதியோடு வரும் வழியில் வழிதவறி விட்டார். அங்கே எதிர்ப்பட்ட இளைஞரிடம்,

"நான் இந்நாட்டின் அரசன்.நாங்கள் காட்டில் வழிதவறிவிட்டோம்!
இந்த வழி அரண்மனைக்குச் செல்லுமா?"
எனத் தோரணையாகக் கேட்க.

வந்தவர் நக்கலோடு..
"இந்த வழி அரண்மனைக்குப் போகாது.
இது இங்குதான் இருக்கும். நீங்கதான் அரண்மனைக்குச் போக வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

கேட்டவர் பேரரசர் அக்பர்.
நக்கலடித்தவர் ..
வேறு யார்??
நம்ம மகேஸ்தாஸ்.
அதாங்க பீர்பாலின் இயற்பெயர்.
(இதன் பிறகுதான் பீர்பால் அக்பரின் அரசவைக்குச் சென்றதும் இறக்கும்வரை இணைபிரியா நண்பர்களானதும்!)

*******************************

ரு சிந்தனையும்...

உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி
பருந்தாகாது..
தாழத் தாழப் பறந்தாலும்
பருந்தும்
ஊர்க்குருவியாக முடியாது..


எப்பூடி..?
சரி.விடுங்க..தூரமோ..பக்கமோ..
வானத்துக்குப் போயிட்டா
ரெண்டும் ஒரு சைசுல தான தெரியும்.
:)

**************************

அனுபவங்களும் ..இன்ன பிறவும்! (ஆனி-12 ,2010)

*
வீட்டுக்கு ஒரு வேலையாக வந்த நண்பனிடம்
நம்ம அண்ணன் சொல்லிக் கொண்டிருந்தார்..

அந்தப் படம் அருமையான படம்ப்பா!!

வந்தவர் கேட்டார்.."எந்தப் படம்?"

அதாம்பா...என்னாது..ஆங்.. அங்காடித்தெரு!
என்னா படம்..நீ பார்த்துட்டேயில்ல?

"இல்லண்ணே இன்னும் பார்க்கல."

"என்னாது இன்னும் பார்க்கலையா..??உண்மையிலேயே இந்தமாதிரி எடுக்குறதுக்கு துணிச்சல் வேணும்பா!!அந்த இயக்குனரை வாயாரப் பாராட்டணும்!
ச்சே..என்னா படம்.. சான்சே இல்ல.."

என்று பரவசமைந்தவரிடம்..
வந்தவர் கேட்டார்..

"அதுனாலதான் அதை இண்டர்நெட்-ல பார்த்தீங்களாக்கும்..!"

அண்ணன் திக்குமுக்காடி மூச்சே விடவில்லை..
கொஞ்ச நேரம் கழிந்த பிறகு டாபிக் மாற்றி விட்டார்!

பி.கு :- இந்த விசயத்தில் நானும் நல்லவனல்ல..
கேள்வி கேட்ட அந்த நண்பரும் கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை.!!

***********************

Have a nice day..என்பதை..
ஒரு ஐஸ் க்ரீம் பார்லரில்

'Have an ice day " என்று எழுதப்பட்டிருந்தது கண்டு

ஹை.! சூப்பர்-ல என்றேன் நண்பனிடம்..

"ம்க்ம்..இது இப்பதான் உனக்கு தெரியுமாக்கும்..
நிக்காத போயிடு" என்றான்..
மெய்யாலுமாங்க??
(வேற ஒண்ணுமில்ல.. முந்தின நாள் தான் ஐஸ்கிரீம் பார்லரில் நண்பனின் பர்சை காலி செய்திருந்தேன்!)
:)
**********

சில (க)விதைகள் (2)

*
கொள்கைகள்!

கைராட்டைக்குப்
போர்த்த
கம்பெனிக் கம்பளி!

********************


ப்போதெல்லாம்
பூங்காக்களிலும்..
கடற்கரையிலும்
பண் பாடுகிறது!
நமது பண்பாடு!

********************

லைமகளை
பேரம் பேசினர்!
கல்விக்கட்டணம்
எனும் பெயரில்!

********************

கை செப்பனிடுகிறான்..
கிழிந்த உடையுடன்..
பொற்கொல்லன்!

********************

நீரின்றி அமையாது உலகு..!
வள்ளுவன் ஞானி!
தெருக்கள் தோறும் கடைகள்!

********************

அவ்ளோதாங்க...
இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க!

கைப்புள்ளயோட ஒரு நாள்!! (கொஞ்சம் ரவுசு!)




-
ரு கைப்புள்ள கத எழுதலாம்னு தோணுச்சு!
எல்லாரும் மனசுல கைப்புள்ளைய நினைச்சு வேண்டிக்குங்க!
ஆரம்பிக்கிறேன்!..ம்மேஏஏ....!!(ஆடு போல கத்தனும்..ஓ.கே!)

இடம் - மதுரையின் முக்கிய அல்லது முக்காத வீதி!
சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
தலைவர் - கைப்புள்ள

டீ வட்டையில் கொண்டு செல்லும் பையனை அழைத்து
கைப்புள்ள :
டேய் இங்க வாடா!
பையன் : என்னண்ணே ? என்னாச்சு?

சரி! அங்க போகுதே ஒரு பொண்ணு .அது யாருடா??

அத எதுக்குண்ணே , நீ கேக்குற?

சும்மாத்தேன் சொல்லு.

அப்படியெல்லாம் சொல்ல முடியாது! என்னான்னு சொல்லு!

எல்லாம் ஒரு காரணமாத்தான் !நான் அத அப்புறஞ்சொல்றேன்!

நானும் அப்புறமாவே சொல்லுறேன்!

டேய்! சொல்லுடா!

யோவ்!போய்யா!எனக்கு வேலை இருக்கு! விடுய்யா!

என்னடா பொசுக்குன்னு சொல்லிட்ட. நான் அண்ணண்டா!

அண்ணணுமில்ல..வெண்..........! எனக்கு யாரையும் தெரியாது!

சரி விடுடா! நானே போய்க் கேட்டுக்குறேன்! போடா!
சின்னப்பய மொதக்கொண்டு இந்த ஊருல நம்மல மதிக்கமாட்டேங்குறாய்ங்க!

யோவ்..போய்யா..என்று தொடங்கி அந்தப்பையன் மேலும் அழகுத்தமிழில் வசவிவிட்டுச் செல்கிறான்!

ஒரு முடிவெடுத்து நேரே அந்தப் பெண்ணிடம் செல்கிறார் கைப்புள்ள.

ஏங்க..! உங்களத்தாங்க!

படபடக்கும் பட்டாம்பூச்சி இமைகளுடன் திரும்பிப்பார்த்து,
நெஞ்சு படபடக்க வேகமாக நகரத் தொடங்குகிறாள் அந்தப்பெண்.

ஏங்க ..சொல்லுங்க..உங்க பேரு என்னங்க?
(ரொமாண்டிக் லுக்கில் கைப்புள்ள கேட்க.. !)

'தள்ளிப்போடா நாயே..செருப்புப் பிஞ்சிரும்.. '
அந்த மஞ்சள் தாவணி அழுதுகொண்டே ஓட..

ஏய்! இந்தா..பேரு கேட்டா தப்பா??
சொல்லமாட்டியா நீ! நாங்கள்ளாம் யாரு தெரியுமில்ல..?
என்றபடி பக்கத்தில் வந்த பைக்கில் கைபட்டு நிறுத்திவிட..
-


******************

டிமாடு! காலையிலேயே இப்படி ஏன் சாலையில வந்து விழுகுற!

என்னாப்பா நீயி! ரைமிங்கா பேசுற..! வெள்ளைவேட்டி சட்டை போட்டு பெரிசா மீசை வச்சுட்டா போதும்!
வந்துருவாய்ங்க பஞ்சாயத்துக்கு..!
-இது கைப்புள்ள.

தம்பி! மரியாதையாப் பேசு! நாந்தான் இங்க கவுன்சிலரு! தலையெடுக்கிறதுக்குள்ள போயிடு!
(வண்டியின் சீட்டுக்கு அடியில் தெரிந்த அரிவாளின் நுனி வயிற்றைக் கலக்க!)

அண்ணே! நீங்க போங்கண்ணே! ஒருபய ஒங்கள எதுவும் பண்ணிருவானா?? நான் பார்த்துக்குறேன்!
டேய்! அண்ணனுக்கு வழிய விடுறா!
என்றபடி ஆளில்லாத சாலையில் ட்ராஃபிக் சரிசெய்து கொடுக்கிறார்!

அரிவாள் பார்ட்டி மீசையை நீவிக் கொண்டு விலக!
(கைப்புள்ள மெதுவாக- எம்புட்டு சைலண்டா திரியுறாய்ங்க!! :(((

*********************



தே நேரத்தில் சற்று தொலைவில்,
ஒரு கும்பல் கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் ஜாக்கிங் வருகிறது!
டேய்! யாருடா ..அந்தப்புள்ளகிட்ட பேரு கேட்டது?

அந்தா ஆரஞ்சு கலர் சட்டையும், பச்சைக் கலர் வேட்டியும் போட்டுருக்குதே அந்த அண்ணந்தேன்!
டீக்கடைப்பையன் தெளிவாகக் கைகாண்பித்துத் தொலைக்க!
அடப்பாவிகளா! பேங்க் லோனு தர்றேன்னு போன வாரம்
மேனேஜர் வந்து நின்னப்ப ஒரு பயபுள்ள வாயத் தொறக்கலையே!

(நொடியில் கைப்புள்ளையை சூழ்ந்து வலம் வருகிறார்கள்!)
டேய்! நீதான் அந்தப்புள்ளயக் கையப் புடிச்சு இழுத்தியா?

(பேருதானடா கேட்டேன்! கையப் புடிச்சு இழுத்தியாங்குறான்?)
வாண்டடா ரௌடி-ங்குறான் . ஏன் வர்ற பேர விடனும்!)
ஏன் வேற யாருன்னு நினைச்ச? ஆமா! நாந்தான் கையப் புடிச்சு இழுத்தேன்!
அதுக்கு என்னா இப்ப?
போன பயபுள்ள மயிலு மாதிரி போச்சு!
நீங்க என்னடா எல்லாரும் மாடுமாதிரி வந்திருக்கீங்க?

கையப் புடிச்சு இழுத்துப்புட்டு என்னா திமுரா பேசுறாண்டா மாப்ள?

சரி! சரி! சட்டுபுட்டுன்னு வந்த வேலைய முடிச்சுபுட்டுப்போ!!

அனைவருமாகச் சேர்ந்து கொண்டு பேசவே விடாமல் கைப்புள்ளயை வெதுப்புகிறார்கள்! ம்மேஏஏ....!!

(விருந்து வைபவம் முடிந்த பின்)
போங்கடா! அதுக்கப்புறமும் என்ன தேடுறீங்க?
எல்லாம் ஊமைக்காயம்! ஆளில்லாதப்ப தான் பேசும்! போ.போ..ம்..ம்!!..


ஒனக்கு இருக்குடி!

அதான் வச்சு இறுக்கிட்டியே .. இதுக்கு மேலயுமா?? போ...!!

******************

(வர்கள் அங்கிருந்து அகல)
சட்டையைக் கழற்றி இடுப்பில் சுற்றிக் கொண்டே!!
கையை நெற்றியில் சல்யூட் போல் வைத்து , கண்களை இடுக்கி - தூரத்தில் பார்க்கிறார் கைப்புள்ள..
அந்த நேரம்,
மீண்டும் டீ கொண்டு வருகிறான் பையன் அதே வழியில்..

ஏண்டா! அந்தாத் தெரியுதே..அந்தக் கருப்புக்குயிலு பேரு என்னடா??

யோவ்..அந்தப்புள்ளய எதுக்குய்யா நீ கேட்குற?

ஏய்..அண்ணிய அப்பிடியெல்லாம் பேசக்கூடாது..ஓ.கே!

யோவ்..நீ திருந்தவே மாட்டியா??

ஏண்டா! நாந்திருந்துனா அப்புற மதுரைய யாருடா பாத்துக்குவா??
போ..போ..நானே போயிக் கேட்டுக்குறேன்!!


கிளம்பும்போதே முனகலாக.....
(போன வாரம் மேலத்தெருவுல கூட இந்த அளவுக்கு இல்லையே!
ஆயுதம் யூஸ் பண்ணாதவரைக்கும் சரிதான்!
நம்மமேல ஆயுதம் பட்டா அதுக்குதான சேதாரம்!
அதானே!!!!) ம்மேஏஏ....!!

சில (க)விதைகள்!




1, வறுமையின் நிறம்!

கூத்துப்பட்டறை
நடிகர்கள்
பூசுகிறார்கள்
அரிதாரம்!
முகத்துக்கு
மட்டுமல்ல!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

பூக்கும்
மத்தாப்பில்
ஏனோ! தெரிகிறது!
சிவகாசிச் சிறுமியின்
முகம்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

2, உத்தமம்!

'ப்ச்'
'சுவாமி சிலையை
இன்று
குளிப்பாட்டியிருக்க வேண்டாம்!'
ஆதங்கப்படுகிறான்!
..
கள்வன்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

ருக்குள்
புகுந்தான் திருடன்!
திருடனை
நையப்புடைத்தனர்
திருடர்கள்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&


3, நில்..! கவனி..!

நீ
பணமிழந்த போதும்
பின்தொடர்கின்ற நிழல்.
இருட்டு வழிகளில்
உன்னுடன் பயணிப்பதில்லை!

&&&&&&&&&&&&&&&

ப்புறம் பார்த்தீங்கன்னா...

இந்தக் கவிதைகள் -ங்கிற ஒரு வார்த்தைல இருந்து எத்தனை வார்த்தைகள் எடுக்கலாம் பாருங்க.

கவிதைகள்
விதைகள்
விதை
தை..
கள்..
கவி..

தமிழ் ...தமிழ்தாங்க!

கபடி..! கபடி..! கபடி..!


(தலைப்பை கில்லி-ல கபடி ஆடும்போது கண்ணை உருட்டி, கட்டை விரலை ஆட்டி விஜய் சொல்வாரே அந்த மாதிரி படிங்க!)
(பக்க வாத்தியம் : நான் விஜய் விசிறி அல்ல!)

கபடி..!! அப்படியே மெல்ல மூச்சை இழுத்துக்கிட்டு கண்ணை மூடிசொல்லுங்களேன்!
இந்த வார்த்தை மந்திரம் மாதிரிங்க அப்ப எங்களுக்கு!
பெரிய பெரிய கபடி மேட்ச்செல்லாம் இரவு நேரத்தில் தான் ஊர்கள்ள தொடங்கும்!
கிலோ வாரியாக நடக்குற மேட்சுல 35 கிலோவுல தொடங்கி 45, 50, 60, அதுக்கு மேல ஓப்பன் டோர்(யார் வேண்டுமானாலும் விளையாடலாம்!) இந்த ஓப்பன் டோர்-வகையில் விளையாடுபர்கள் எல்லாம் உள்ளூர் அர்னால்டு ரேஞ்சுக்கு இருப்பார்கள்! இந்த கடோத்கஜன் டீமை சில நேரம் சின்னப் பையன்கள் நிறைந்த நாகேஷ் டீமிடம் கோத்துவிட்டு விடுவார்கள். அப்போது ஆடியன்ஸோட ஃபுல் சப்போர்ட்டும் அந்த சின்ன டீமுக்குத்தான்! அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு பாய்ண்டும் அப்ளாஸ்களை அள்ளும்!

எனக்கு என்னோட நண்பனுக்கும் ரோல்மாடலாக அப்போதைய சில கபடி வீரர்கள் இருந்தார்கள்!அவர்களுடைய அர்னால்டு சைஸ் தொடைகளைப் பார்த்துவிட்டு ஏக்கப் பெருமூச்சு விடுவோம்! உருக்கு மாதிரி உடம்பை வைத்திருப்பார்கள்! அந்த ஏக்கத்தில் நானும், நண்பனும் சுண்டக்கடலையை ஊற வைத்து தண்டால் எடுத்தகதைகளும் உண்டு.சும்மா ரெண்டு நாளைக்கு!ஆனால்,நீங்கள் தொடர்ந்து கபடி விளையாண்டால், உங்கள் உடல் கட்டாவதை(ரெண்டா இல்லீங்க!.. பழனிப் படிக்கட்டு!) நீங்களே நினைத்தாலும் தடுக்க முடியாது!

முதல்நாள் இரவு 9 மணிவாக்கில் தொடங்கி மறுநாள் சாயங்காலம் வரை கபடி நடக்கும்! நானும் , எனது நண்பனும் தலையில் ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்து விடுவோம்! ஹே..ஹே என்று கூட்டம் கூவக்கூவ நம்ம பசங்க சும்மா பின்னுவாங்க!
கிரேக்க அச்சிலஸ்,மகாபாரத கர்ணன் மாதிரி வீழ்த்தவே முடியாத வீரர்களெல்லாம் இருப்பாங்க! எப்புடிப் புடிச்சாலும் போயிடுறாண்டா..இவனை என்ன தாண்டா பண்ணுறது-ந்னு திகைக்க வச்சுருவாங்க சிலபேர்!தோள்பட்டைக்கு மேலே பறப்பாங்க!
சும்மா வில்லு மாதிரி வளைவாங்க..இன்னும் சில பேரு பீமன் மாதிரி மொத்த டீமையும் இழுத்துக் கொண்டு வருவார்கள்! நல்ல பார்வைத்திறனும், லாஜிக் புத்தியும் கபடிக்கு ரொம்ப அவசியம்!

*நடுவரின் தீர்ப்பே இறுதியானது!
*ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்!
*முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை!

இப்படி கபடி நோட்டீஸிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட மாட்டாது! 'இதுதான் உங்களுக்கு இறுதி அழைப்பு ' என்று இருபத்தாறு தடவை டீமை அழைத்துக் கொண்டிருப்பார்கள்!

ரெண்டு டீம் ஆடுதுன்னா ரெண்டு ஊருக்காரங்களும் மல்யுத்தம் போடுற மாதிரிதான்! ஏதாவது பிரச்சினைன்னா உடனே ரெண்டு ஊருப்பயபுள்ளைகளும் களத்தில் இறங்கி நடுவரிடம் சண்டைபோட்டுக் கொண்டிருப்பார்கள்! மைக்கில்- வெளியாட்கள் உள்ளே வர வேண்டாம்! நடுவரின் தீர்ப்பே இறுதியானது - என்பது காற்றினிலே வரும் கீதம் போலக் கரைந்து கொண்டிருக்கும்!

15-5-15 என்பதுதான் மேட்ச் டைமிங்!


இதில் 5 என்பது டைம்-அவுட் மற்றும் சைடு சேஞ்சுக்கானது.
ஆனா, பிரச்சினை வந்துச்சுன்னா சில மேட்ச் விடிஞ்சாலும் முடியாது!
முருகேசன் நினைவுக்குழு,
வெண்ணிலா கபடிக்குழு,
தேவரின் செல்வங்கள்,
பயமறியா தம்பிகள்..
இதெல்லாம் சில சுற்று வட்டாரக் கபடி டீம் பெயர்கள்!

கபடியில மைக் அறிவிப்புகள், சுவரொட்டிகள் எல்லாமே தூய தமிழில் என்பது ஒரு மகிழ்ச்சியான விசயம்!ரெடிமேடாக முந்தின நாளே வந்து முளைத்திருக்கும் கடைகள் நல்ல லாபம் பார்த்து விடுவார்கள்.மைக் செட்,லைட்ஸ், கொட்டகை, ஏன் பரிசையும் கூட அந்தந்த ஊரிலுள்ளவர்கள் அன்பளிப்பு அளித்து விடுவார்கள். அதுக்குப் பரிகாரமாக அவர்கள் பெயர் நோட்டீஸில் இருக்கும்!

எனக்கு சிறிய வயதில் கிரிக்கெட்டை விட கபடியில் தான் ஆர்வம் அதிகம். பள்ளிக்கூடத்துல பசங்க நோட்டீஸ் அடிக்க வசதியில்லைன்னா கையிலேயே முதல் காப்பி எழுதி அதை பிரதி எடுத்து பள்ளியெங்கும் ஒட்டி விடுவார்கள். சில சமயம் கையெழுத்துப் பிரதியிலேயே நோட்டீஸ் உருவாக்கிய சம்பவங்களும் உண்டு!நம்ம கையெழுத்து அழகாயிருக்கும்னு நம்மகிட்ட வந்து (நம்புங்க பாஸ்!) எழுதிவாங்கிட்டுப் போவாங்க. எழுதுறது மட்டும்தான் இவன் வேலை விளையாண்டதெல்லாம் இல்லைனு நினைச்சுறாதீங்க.
ஒரே ஒரு மேட்சுல சரியா 35-கிலோ இருந்தப்ப கபடி, கபடி-ந்னு நானும் இறங்கினேன். அந்த மேட்ச் பாதியிலேயே அடிதடி- யில நின்னுபோச்சு.
எல்லாரும் அடிச்சுக்கிட்டு நின்னப்ப நான் டென்ஷனாகி ஓரமாய் இருந்த டீக்கடையில போயி டீக் குடிச்சேன்.(வீரம்ப்பு..)

அதோ..ட சரி! மத்தபடி ஊருக்குள்ள விளையாடுவனே தவிர ஊரு விட்டு ஊரு போயி அடிவாங்குற வேலையே இல்ல! போனா நல்ல பிள்ளையா மேட்சு பாக்குறதோட சரி! வாய்ப்புக் கிடைச்சா,ஒரு தடவை கிராமத்துல போய்க் கபடி மேட்ச் பாருங்களேன்!
அது ஒரு தனீ... உலகம் பாஸ்!







கொஞ்ச(ம்) நீ என்னருகில் வாயேன்!!!!



சாம்பாருடன் கொஞ்சம் சோறு
சடுதியாட நிறை சேறு!
பாம்பாட்டி போலொரு ஆட்டம்!
பம்பரம் போல்சுழல் ஓட்டம்!
வீம்பாகத் தலைசாய்ப்பு, கோபம்
விளையாட்டாய்க் கொஞ்சலொடு சிணுங்கல்
தாம்பாலத் தட்டினிலே இனிப்பு
தகிக்காத வெயிலினிலே களிப்பு!

கள்ளமில்லா சிறார் வேணும்!
காலத்துக்கும் விளையாட வேணும்!
பள்ளமில்லா வாழ்க்கையும் வேணும்!
பயமின்றிப் பாடியாட வேணும்!
உள்ளத்தில் உருவாகும் நினைப்பு!
உயர்வாகி நலம்பெறவே வேணும்!
பள்ளிக்கு மீண்டும்நான் போயே
பாடமிரண்டு படித்திடவும் வேணும்!

குருவிபோல் வானத்தின் மீதே
குழந்தைநான் பறந்திடவும் வேணும்!
தெருவிலே நண்பனொடு அலைந்து
தேடிபழம் அடித்திடவும் வேணும்!
நல்லபிள்ளை யாயிருப்பேன் - அம்மா!
நலமாகச் சொல்கேட்பேன் - அம்மா!
கொஞ்சம்நீ என்னருகில் வாயேன்-மீண்டும்
குழந்தையாய் மாற்றிவிடு தாயே!

சின்னச் சின்ன சிந்தனைகள்! ( 4 )



௧, குருதி!

முள்பட்டவுடன்
முளைக்கிறது
ரோஜா.!

*************

௨, ச்சே..!!

காலை மிதித்தவனிடம்
பாய்ந்தேன் சண்டைக்கு...
கண்ணீரோடு காண்பித்தான்
கட்டைக்கால்.!

*************

௩, ரோசம்!

வீட்டைப் பறித்தவனை
விட்டு வைப்பதில்லை..
தேனீ..(கூட)..

*************

௪, மரியாதை..

விடமற்ற பாம்புக்கும்
நகமற்ற புலிக்கும்
இல்லை..

*************

௫, அப்புறம் வேற என்ன?
நீங்கதான் ஏதாவது சொல்லனும்!
வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?
:)

போன தலைமுறை வரை அனைவரும் உபயோகம் செய்த தமிழ் எண்களை கூகிளில் எங்கெங்கோ தேடிப்பார்த்துவிட்டு கடைசியில் இங்கிருந்துதான் சுட்டேன்!மேலும்,சுடுவதற்கு->
http://thangaththamil.blogspot.com/2010/03/blog-post_24.html

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!