புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சின்னச் சின்ன சிந்தனைகள்! ( 3 )



முன் குறிப்பு:
** படத்துக்கும் கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!

1,எப்புடி!!!!!

அதோ..பாருங்கள்..!
தூ...ரத்தில்!
சிறகுவிரித்துப் பறக்கிறது…
- -
உங்கள் சிந்தனை..!
(எனது கற்பனையும்)
:)

**********

2,நினைவிருக்கட்டும்!

துரத்திக்கொண்டேயிருக்கிறது
ஒவ்வொருவரையும்
குறிப்பிட்ட தூரத்தில்
மரணம்..!

*********

3,பனித்துளி!

சிலநொடி
நேரமாயினும்
சூரியனை எதிர்க்கும்
தைரியம்..!

*********

4,வீண்!

ஓரிடத்துச்செல்வம்
உதவுவதில்லை
யாருக்கும்..
கடல்நீர்!

***********


அம்புட்டுதேன்..!!!!!!

நாம் எதையோ இழந்துகொண்டிருக்கிறோமோ.!!



கார்த்திகைப்பனி, காகிதக்கப்பல்கள், கொட்டும்மழை நனைதல்,கபடி, பட்டை..என்று பலவற்றை இப்போதுள்ள பிள்ளைகள் இழந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!
தங்களது பிள்ளைகளுக்கு டைட் செடியூல் இருப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள் பெற்றோர்கள்.அதிலும் அப்பா, அம்மா என்று அழைப்பதை விட மம்மி, டாடி என்று அழைத்தால்தான் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுகிற வீட்டையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். தமிழ் என்ன அப்படி தப்பு செய்தது??தமிழைப் பற்றி ஒரு கருத்து..எங்கே படித்தேன்.? நினைவில்லை..
அவர் சொல்லியிருந்தார்,

' எனக்கு முந்தைய தலைமுறையில் 'மாடு கன்னு ஈனியது' என்றார்கள்.
என் தலைமுறையில் 'மாடு கன்னு போட்டது' என்கிறேன்.
எனது பிள்ளைகள் 'மாட்டிற்கு டெலிவரி' என்கிறார்கள்.
'

இவரது கருத்து ஏற்புடைய ஒன்றே.
மாட்டுக்கு மட்டுமா டெலிவரி-ந்னு நாம சொல்றோம்.விடுங்க, அடுத்த நூற்றாண்டுல மாடே இருக்காது. மனிதன் மட்டும் இருப்...??
க்ளோனிங் -ல மாடு மாதிரி மனிதனும் கண்டுவிடுவார்கள் என்று சொல்ல வந்தேன்.
சரி.. இப்போ கொஞ்சம் சொந்தக்கதை..
எங்களூர்களில்,
வீட்டிற்கு முன்புள்ள பரந்த தரையில் தான் நெல், தானிய வகைகளையெல்லாம் காயப் போடுவார்கள்.இதைப் பாண்டிய நாட்டில் கட்டுத்தரை என்று கூறுவார்கள்!
எங்கள் ஆயா காலத்தில் காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து கட்டுத்தரை கூட்டி,சாணமிட்டு, கம்பிக்கோலமெல்லாம் போட்டு நாம் விழிக்கும்போது லெட்சுமி முகத்தில் விழித்தது போலிருக்கும்.
(கவனிக்க: லட்சுமி என்ற பெயரில் எங்கள் வீட்டுக்கு அருகில் எந்தப் பெண்ணும் இல்லை.!!)

என் அம்மாவுடன் கூடப்பிறந்தவர்கள் 3 தம்பிகள்!
மூவருக்கும் முறையே 3 ஆண்டு இடைவெளிகளில் திருமணம் முடிந்து விட்டது. எங்களது 3 அத்தைகளும் வந்த பிறகு ஒரே வருடத்தில் இந்தியா மேப் அளவிற்கு இருந்த இந்தக் கட்டுத்தரை சுருங்கி இலங்கைத்தீவு போலாகிவிட்டது.(இப்போது இன்னும் சுருங்கி ராமேஸ்வரம் ரேஞ்சுக்கு ஆகிவிட்டது வேறு விஷயம்.!)
ஐயா இருந்தபோது செழுமையாயிருந்த தோட்டங்கள், தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்படாததால், முட்களிருந்தாலும் எனக்கு அருமையான நார்த்தம்பழங்களை தந்து கொண்டிருந்த மரங்களெல்லாம் பட்டுப்போனது வேறு சோகக்கதை.13,15,17 என்று நான் எண்ணுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த கட்டுத்தரையிலிருந்த மாடுகள் காலாவதியாகியிருந்தன.நாய்களைக் கூட தேடவேண்டியிருக்கிறது.
(ஐயையே..என்ன இது! ஒரே அழுகாச்சியா இருக்கு..!
காலம் மாறிருச்சு தம்பி!)
ஊர்களில்
வேட்டைக்கென்றே வைத்திருந்த நாய்களெல்லாம் தேவையில்லாத அளவிற்கு இன்று மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். ஊரோடு 'பாரிவேட்டை ' என்று கிளம்பிப்போய் கிடைத்ததைப் பங்கு போட்ட பங்காளிகளெல்லாம் மறைந்து போய் இன்று மழைத் தண்ணீர் ஒழுங்குபடுத்தலுக்காக எல்லோரும் பகையாளிகளாக மாறியிருக்கிறார்கள்!கல்யாண வீட்டுக்கு சொல்லியும் செல்லாவிட்டாலும், கருமாதி வீட்டுக்கு சொல்லாமல் சென்ற 'ரோசங்களும், பாசங்களும்' மறைந்து விட்டன.

தாவரமுள்வேலிகள் முன்பு வீடுகளைப் பிரித்தன. அதனூடே தெரிந்த இடைவெளியில் மக்கள் தங்கள் முகம் பார்த்து பேசிக் கொள்வார்கள்!இப்போது எடுக்கப்பட்ட காம்பவுண்டு சுவர்களைத் தாண்ட மனமின்றி எப்போதும் ஏதாவது சத்தமென்றால் கிளைமாக்ஸ் காட்சி எதிர்பார்த்து மட்டும் நல்லபாம்பு போன்ற தலைநீட்டல்களும், தனக்கு தொலைக்காட்சியின் நெடுந்தொடரில் ஏற்பட்ட கவனக்கலைப்புக்கான 'உச்' கொட்டல்களிலுமே மு(ம)டிந்துவிடுகிறது நமது மனிதாபிமானங்கள்!

இருங்கள் ஏதோ வெளியில் சத்தம் கேட்கிறது! நான் முகம்பார்த்தே விசாரிக்கிறேன்!
எங்கள் வீட்டில் வேலிதான்(காம்பவுண்டு அல்ல!)
'ப்ச்' "மனிதர்கள்... ஏழைகளாகவே இருந்திருக்கலாம்!"
பேருந்துகளில் விபத்துகளைப் கணநேரம் பார்த்து "ச்சு' கொட்டிச் செல்லும் அளவிற்கு நமது மனித அபிமானம் உயர்ந்திருக்கிறது!
எதையெதையோ செய்ய நினைத்து எதையுமே செய்யாமல் முடிவதுதான் வாழ்க்கை! - ன்னு பிளேடேவோ யாரோ ஒரு அறிஞர் சொன்னார்.அதே மாதிரிதான், எதையெதையோ சொல்ல நினைத்து எதையும் சொல்லாமல் நம்ம கட்டுரையும் முடிகிறது!தவறிருந்தால் சுட்டுங்கள்! அல்லது குட்டுங்கள்!
(கை பத்திரம்! வல்லாரை லேகியத்தை வளைத்துத் தின்ற உடம்பு!)

கடைசியா ஒரு குட்டிக்கவிதை..

உலகில்,
அதிகரித்துக் கொண்டே போகிறான்..
மனிதன்!
குறைந்துகொண்டே போகிறது..
மனிதம்!


உண்மைதானா??

சின்னச் சின்ன சிந்தனைகள்!


நம்ப ஏழைப்பங்காளர்களை நினைத்தா ஒரே


கருத்துமழைதான் போங்க..!


**************************************



சாதிக்கு


ஒரு கட்சி..!


தேதிக்கு


ஒரு கட்சி..!


வீதிக்கு


ஒரு கட்சி..!


. . .


நீதிக்கு..??


*************************


.சி..


வண்டிகளில்


ஏழைப்பங்காளர்களின்


பரப்புரைகள்..!


************************


உழைக்க


வழியில்லை..!


பிழைக்க


மட்டுமே வழி..!


அரசியல்!


*****************************


சேவல்


கூவுவதால்


விடிவதில்லை


பொழுதுகள்!


அரசியல்வாதியின்


ஆணைகள்..!


********************************* 


 

சின்னச் சின்ன சிந்தனைகள்..!


அப்படியா..??

அவ்வளவு குளிரிலும்
வியர்க்கிறது....
குளிர்சாதனப் பெட்டியிலுள்ள
பழங்களுக்கு..!!


***************************************
தேடல்!

இருட்டினில்
தேடிக்கொண்டேயிருக்கிறோம்..
..
..
வெளிச்சத்தை..!!

***************************************
ஆறுதல்!

தலைவலியா..??
காய்ச்சலா..??
ஜலதோஷமா..??
ஆறுதலாக விசாரிக்கிறார்களே..
இவர்களாவது..
தொலைக்காட்சியில் விளம்பரம்..!!??


***************************************

உதவி!

உதவி அலுவலர்க்கு
உதவிய பின்னரே..
கிடைக்கிறது..
..
உதவித்தொகை..!

*******************

ஆம்..!!



-
ஆலமரத்தை

ஒளித்துவைக்கும் சக்தி!

என்னிடம்

சொல்கிறது

விதை..!!

அறி..!!



சமாதிகள் முடிவு அல்ல!!

வண்ணத்துப்பூச்சி

வந்த

கதை..!!

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!